போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Krishna Arrested in Drugs Case : தமிழ் திரையுலகில் போதைப்பொருள் வழக்கு தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் முதலில் சிக்கினார். பிரதீப் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் போதைப்பொருள் உட்கொண்டதை கண்டுபிடித்ததை அடுத்து அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைந்துள்ளனர். ஸ்ரீகாந்தை சிக்க வைத்த பிரதீப், நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப் பழக்கம் இருப்பதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

நடிகர் கிருஷ்ணா வாக்குமூலம்

இதையடுத்து நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகக்கோரி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் எந்தவித ரிப்ளையும் கொடுக்காததால் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கிருஷ்ணா பிடிபட்டார். அவரிடமும் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் தான் கடந்த ஆண்டு தான் ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொண்டதாகவும், உயர்ரக போதைப்பொருள் உட்கொள்ளும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.

அதுமட்டுமின்றி தனக்கு கேஸ்டிரிக் பிரச்சனை இருப்பதாகவும், ஏதேனும் அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு வந்துவிடும் என்றும் கூறி இருந்தார். இதையடுத்து நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் கடந்த 45 நாட்களாக எந்தவித தடை செய்யப்பட்ட போதைப்பொருளும் உட்கொள்ளவில்லை என தெரியவந்தது. அவர் போதைப்பொருள் உட்கொள்ளாவிட்டாலும் அதை விற்பனை செய்தாரா என்கிற கோணத்தில் நேற்று இரவு முழுக்க கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நடிகர் கிருஷ்ணா கைது

இந்த விசாரணையின் போது நடிகர் கிருஷ்ணாவின் செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் டெலிட் செய்திருந்த மெசேஜ்களை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் அவர் நண்பர்கள் சிலரிடம் Code Wordல் பேசியது தெரியவந்தது. அந்த Code Word.போதைப்பொருள் தொடர்பானதாக இருக்கலாம் என்பதால் நடிகர் கிருஷ்ணாவை அதிரடியாக கைது செய்த போலீசார் அவரிடம் Code Word.தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். போதைப்பொருள் வழக்கில் அடுத்தடுத்து இரண்டு நடிகர்கள் சிக்கி உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.