Google AI ஆப்பிள் மற்றும் கூகுள் இடையேயான புதிய AI ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். இது அதிகார குவியலுக்கு வழிவகுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழில்நுட்ப உலகில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் AI (செயற்கை நுண்ணறிவு) போட்டியில் ஆப்பிள் நிறுவனம் சற்று பின்தங்கியுள்ளது. இந்நிலையில், தனது ஐபோன்களில் உள்ள 'Siri' சேவையை மேம்படுத்தவும், பிற AI அம்சங்களைக் கொண்டுவரவும் கூகுள் நிறுவனத்தின் உதவியை நாட ஆப்பிள் முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த ஆப்பிள் - கூகுள் கூட்டணியை டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் கடுமையாகச் சாடியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எலான் மஸ்க் முன்வைக்கும் குற்றச்சாட்டு

தனது சொந்த சமூக வலைதளமான X-ல் (ட்விட்டர்) இது குறித்துப் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், இந்த அறிவிப்புக்குத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஆண்ட்ராய்டு (Android) மற்றும் குரோம் (Chrome) போன்ற ஆதிக்கம் செலுத்தும் தளங்களை கூகுள் தனது வசம் வைத்துள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்துடனான இந்த புதிய ஒப்பந்தம், தொழில்நுட்பத் துறையில் ஒரு "நியாயமற்ற அதிகாரக் குவிப்புக்கு" (Unreasonable concentration of power) வழிவகுக்கும் என்று மஸ்க் வாதிட்டுள்ளார்.

களத்தில் குதித்துள்ள xAI மற்றும் சட்டப் போராட்டம்

எலான் மஸ்கின் சொந்த AI நிறுவனமான xAI-யும் இந்தத் துறையில் ஒரு முக்கிய போட்டியாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்பு 'Grok' என்ற தனது ஜெனரேட்டிவ் AI-ஐ அறிமுகப்படுத்திய xAI, தற்போது ஆப்பிள் நிறுவனத்துடன் சட்டரீதியான மோதலில் ஈடுபட்டுள்ளது. உண்மையில், ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் மற்றும் ஓப்பன் ஏஐ (OpenAI) ஆகிய இரு நிறுவனங்களுக்கு எதிராகவும் xAI வழக்கு தொடர்ந்துள்ளது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

ஆப்பிள் நிறுவனம் கூகுளின் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான இந்த ஒப்பந்தம் குறித்த தகவல், திங்களன்று இரு சிலிக்கான் வேலி நிறுவனங்களாலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், கூகுளின் சக்திவாய்ந்த 'ஜெமினி' (Gemini) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஐபோன் மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகளுக்கான பிரத்யேக "Apple Intelligence" அம்சங்கள் உருவாக்கப்பட உள்ளன.

பின்தங்கிய ஆப்பிள் - மீண்டு வருமா?

கூகுள் மற்றும் பிற போட்டியாளர்கள் AI பந்தயத்தில் முன்கூட்டியே முன்னிலை பெற்ற நிலையில், ஆப்பிள் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் இத்துறையில் கால் பதிக்கத் திட்டமிட்டிருந்தது. இந்த அம்சங்கள் முதலில் 2024-ல் ஒரு பெரிய மென்பொருள் அப்டேட் மூலம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூகுள் மற்றும் சாம்சங் ஆகியவை தங்கள் சாதனங்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய போதிலும், ஆப்பிளின் பல AI அம்சங்கள் இன்னும் வளர்ச்சிக் கட்டத்திலேயே உள்ளன. குறிப்பாக, ஐபோனில் எதிர்பார்க்கப்பட்ட 'Siri' சேவையின் மாற்றம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது.