கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரன் பட்டினம் கிராமத்தில் கடந்த 9 நாட்களாக தேடப்பட்டு வந்த இளைஞர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரன் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவண குமார் (வயது 34). முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சிவசங்கரின் மகனான இவர் பட்டபடிப்பு முடித்துவிட்டு தனது சகோதரர் மற்றும், தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 9 தினங்களுக்கு முன்பு சரவண குமார் திடீரென மாயமானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனைத் தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சவரண குமாரை தேடிய வண்ணம் இருந்தனர். இருப்பினும், அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ராஜேந்திரன் பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீரில் கடந்த 2 தினங்களாக துர்நாற்றம் வீசுவதாக கூறப்பட்டது.

முதுமலையில் புலி தாக்கியதில் பெண் பலி

இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று அதிக அளவில் துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஊர் மக்கள் உடனடியாக மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் பார்த்துள்ளனர். அப்போது கடந்த 9 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன சரவண குமாரின் உடல் அழுகிய நிலையில் நீரில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் தொட்டியில் இருந்த நீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு சரவண குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது; 40 சவரன் மீட்பு

துர்நாற்றத்துடன் விநியோகிக்கப்பட்ட குடிநீரை கடந்த சில தினங்களாக அப்பகுதி மக்கள் குடித்து வந்த நிலையில், அப்பகுதி மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படாத வண்ணம் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.