- Home
- Tamil Nadu News
- ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. பொங்கியெழுந்த பாஜக, கூட்டணி கட்சிகள்.. விஜய்க்கு தலைவலி!
ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. பொங்கியெழுந்த பாஜக, கூட்டணி கட்சிகள்.. விஜய்க்கு தலைவலி!
ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என கூறிய வேளையில், ரஜினிக்கு திமுகவை எதிர்க்க மனவலிமை இல்லை. விஜய்க்கு அந்த மன வலிமை உள்ளது என ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக நடிகர் விஜய்யின் தவெக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பம்பரமாக சுழன்று வரும் நிலையில், அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையானது. அதாவது திமுக குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குப் பல்வேறு மிரட்டல்களை கொடுத்து, அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்து முடக்கினர் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு வலுக்கும் கண்டனம்
ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என கூறிய வேளையில், ரஜினிக்கு திமுகவை எதிர்க்க மனவலிமை இல்லை. விஜய்க்கு அந்த மன வலிமை உள்ளது என ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ரஜினி குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொங்கியெழுந்தன.
எல்.முருகன் கண்டனம்
இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் கூறுகையில், '' ஜாதி, மதம், மொழியைக் கடந்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் அறிந்த நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அனைத்த தரப்பு மக்கள் மீது தீராத அன்பு கொண்ட அவர், தவறை சுட்டிக்காட்ட என்றுமே அவர் தயங்கியதில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதும், மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயமின்றி எதிர்த்து நிற்பதையும் வழக்கமாக கொண்டவர்.
அரசியலுக்கு வந்து அவர் மக்கள் தொண்டாடற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த அவர்கள், அரசியல் பாதையில் பயணம் செய்ய முடிவு செய்து பிறகு உடல்நலப் பிரச்சனையால் முடிவை கைவிட்டார். அவரை பற்றியும் அவரது அரசியல் பயண முடிவு குறித்து தவெக மூத்த நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா வாய்ப்புக்கு வந்தபடி பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
சொந்த அரசியலுக்காக தமிழக மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட மாபெரும் நடிகர் குறித்து ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளததை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். அவருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ''தமிழக மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ள ஒரு மாபெரும் ஆளுமையைப் பற்றி தவெகவின் ஆதவ் அர்ஜூனா பொதுவெளியில் தேவையற்றக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது. அவர் ரஜினி ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு தலைவலி
மேலும் பாஜக கூட்டணியில் உள்ள தமாக தலைவர் ஜி.கே.வாசன், 'ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களால் நேசிக்கப்படும் கலைத்துறையின் மூத்த நடிகர். உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். அவர் குறித்த ஆதவ் அர்ஜுனாவின் கருத்து ஏற்புடையதல்ல. மக்கள் நிராகரிப்பார்கள்'' என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே தலைவர் விஜய், கரூர் சம்பவம், தனிப்பட்ட குடும்ப விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறார். இதுபோததென்று ஆதவ் அர்ஜுனாவும் தேவையில்லாமல் ரஜினி ரசிகர்களிடம் வம்பிழுத்து இருப்பது அவருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

