ரஜினியை மிரட்டிய திமுக.. புது குண்டை தூக்கிப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவும் சிஸ்டத்தை மாற்றவும் ரஜினிகாந்த் விரும்பினார். ரஜினிகாந்திற்கு அந்த நேரத்தில் திமுக மிரட்டல்களைத் தாங்கும் மனவலிமை இல்லாமல் போனது.

தமிழக அரசியல் களம்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்டது. இதனால் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி நடிகர் விஜய்யின் தவெக. திமுகவையும், பாஜகவையும் விளாசி வரும் விஜய், திமுகவுக்கு நேரடி போட்டியே தவெக தான் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்து வருகிறார்.
ரஜினிகாந்தை மிரட்டிய திமுக
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர விடாமல் திமுக மிரட்டியது என்று தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குப் பல்வேறு மிரட்டல்களை கொடுத்து, அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்து முடக்கினர் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
மிரட்டலை தாங்க முடியாத ரஜினி
எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவும் சிஸ்டத்தை மாற்றவும் ரஜினிகாந்த் விரும்பினார். ரஜினிகாந்திற்கு அந்த நேரத்தில் திமுக மிரட்டல்களைத் தாங்கும் மனவலிமை இல்லாமல் போனது. இறுதியில் அவர் ரஜினிகாந்த் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
விஜய்க்கு மனவலிமை உள்ளது
ஆனால் அனைத்து மிரட்டல்களையும் தாங்கும் மன வலிமை விஜய்க்கு உள்ளதாகவும், திமுக அரசு எவ்வளவு இன்னல்களைக் கொடுத்தாலும், கரூரில் நடந்த சம்பவங்கள் போன்ற நெருக்கடிகளைச் சந்தித்தாலும் விஜய் பின்வாங்க மாட்டார் என்றும் ஆதவ் அர்ஜுனா உறுதிபடக் கூறினார். மேலும் திமுகவை விமர்சித்த வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், ஓபிஎஸ் ஆகியோர் இன்று திமுகவின் பணபலத்துக்கு முன்பு முடங்கி விட்டனர் என்றும் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
ரஜினிகாந்துக்கு நடந்தது என்ன?
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2020ம் ஆண்டு அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ஆன்மிக அரசியலை முன்னெடுப்பேன் என்றும் கூறினார். பல ஆண்டுகள் எதிர்பார்ப்புக்கு பிறகு அவர் அரசியலுக்கு வந்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அறிவித்த சில நாட்களிலேயே 2020 ஆம் ஆண்டு இறுதியில் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

