தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும். திமுக சார்பில் வில்சன், சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 34 எம்ஏக்களுக்கு ஒரு மாநிலங்களை எம்பி தேர்ந்தெடுக்க முடியும். அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கும். அந்த வகையலில் தற்போது எம்பியாக உள்ள அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து மீண்டும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இந்த நிலையில் திமுக சார்பாக போட்டியிடவுள்ள 3 பேர் கொண்ட பட்டியலையும், கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடத்தை ஒதுக்கியும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக சார்பாக வேட்பாளராக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் போட்டியிடுவார்கள் என்று திமுக அறிவித்துள்ளது. இந்த நிலையில் திமுக சார்பாக போட்டியிடவுள்ளவர்கள் யார்.? யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

சல்மா:

சல்மா என்கிற ரொக்கையா மாலிக் ,எளிய இசுலாமிய குடும்பத்தில் இருந்து வந்த பெண்மணி.

திருச்சி மாவட்டம் பொன்னாம்பட்டி பேரூராட்சித் தலைவராக பணியாற்றிய சல்மா, 2006 இல் மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தமிழ்நாடு சமூக நல வாரியத்தலைவராக பணியாற்றியுள்ளார்.

கவிதை, நாவல் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் சல்மாவின் படைப்புகள் அர்மீனியன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக திமுகவில் பணியாற்றி வருகிறார்.

வில்சன்:

மூத்த வழக்கறிஞர்.

இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனராலகவும், தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனராலாகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தை மெரினாவில் அமைக்க சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 முதல் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மீண்டும் தற்போது இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.சிவலிங்கம்:

திமுகவின் நீண்டகால களப்பணியாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம் திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். எஸ்.ஆர்.சிவலிங்கம் 1989 மற்றும் 1996 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் திமுக சார்பாக அறிவிக்கப்பட்ட மாநிலங்களைவைக்கான வேட்பாளர் பட்டியலில் கிறித்துவர், இசுலாமியர்-பெண் என வெவ்வேறு சமூகத்திலிருந்து வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கவிஞர்-எழுத்தாளர், மூத்த வழக்கறிஞர், நீண்டகால கட்சிக்காரர் என்ற வகையிலும் பட்டியல் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.