திமுக அரசு என் அரசியல் பயணத்தை முடக்கப் பார்த்தாலும், தடுக்க நினைத்தாலும் அது நடக்காது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் பேசிய விஜய் மத்திய அரசையும், திமுக அரசையும் கடுமையாக சாடினார். அதே வேளையில் என்.ஆர்.காங்கிரசை கடுமையாக சாடினார். புதுவை அரசுடன் கூட்டணி வைத்திருந்தும் மத்திய பாஜக அரசு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய விஜய், புதுவைக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
திமுகவை ஒருபோதும் நம்பாதீர்கள்
மேலும் அரசியல் கட்சிகளுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதை திமுக அரசு புதுச்சேரி அரசிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய விஜய், புதுவை மக்கள் திமுகவை ஒருபோதும் நம்பாதீர்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில், புதுவை பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காக தமிழகம், புதுவை தவெகவினருக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயம்
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஜய், ''என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம்.எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.
புதுவை அரசுக்கு பாராட்டு
நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி பேதமின்றி, வெறுப்புணர்வின்றி எதிர்க்கட்சியான நம் நிகழ்வுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.
காவல் துறைக்கு நன்றி
அந்த வகையில், புதுச்சேரி அரசுக்கும் முதல்வர் அவர்களுக்கும் உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநிலக் காவல் துறைக்கும் நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.
திமுக என்னை முடக்க முடியாது
அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது. கழகத்தின் எதிர்பார்ப்பை, வேண்டுகோள்களை, உத்தரவுகளை மனதார மதித்து, நிகழ்வை வெகு வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த, அதற்குக் காரணமாயிருந்த தமிழகம், புதுச்சேரி மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி'' என்று கூறியுள்ளார்.


