தமிழகத்தின் நிதிநிலை தொடர்பாக தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. மேலும் வெள்ளை அறிக்கை தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலை தொடர்பாக நிதி அமைச்சர் வில்சன் வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். தமிழக அரசின் வெள்ளை அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பூகம்பத்தைக் கிளப்பி உள்ளது. குறிப்பாக மொத்தக் கடன் – ₹13.18 லட்சம் கோடி, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் கடன் – ₹3,18,176 கோடி, மின் விநியோகத் துறை கடன் – ₹1.70 லட்சம் கோடி, மின் உற்பத்தித் துறை கடன் – ₹1.30 லட்சம் கோடி, மின் பரிமாற்றத் துறை கடன் – ₹31,000 கோடி, போக்குவரத்துக் கழகக் கடன் – ₹44,000 கோடி, நுகர்பொருள் வணிகக் கழகக் கடன் – ₹27,000 கோடி, குடிநீர் வாரியங்களின் கடன் – ₹7,776 கோடி, அரசின் உத்தரவாதப் பொறுப்பு – ₹1,79,782 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும், திமுக மூத்த நிர்வாகியுமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல!
எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


