தமிழகத்தில் ரோடு ஷோவுக்கு முழுமையாக உடனே தடை விதிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ரோடு ஷோவில் பணம் கொடுத்து கூட்டம் கூட்டப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் ஏற்பட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாயினர். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காத வகையில், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்ப்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற விசிக தமிழகத்தில் ரோடு ஷோவுக்கு தடை விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்ததாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரோடு ஷோ என்ற பெயரில் செயற்கை கூட்டங்கள்

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த சில ஆண்டுகளாக 'ரோடு ஷோக்கள்' என்ற பெயரில் சிறு நகரங்களிலும் பெருநகரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதிகளில் அரசியல் தலைவர்கள் தமது செல்வாக்கைக் காட்டுவதற்காக செயற்கையாகக் கூட்டங்களை கூட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பொருளிழப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்படுசின்றன. அதன் உச்சகட்டமாகவே கரூரில் 41 உயிர்கள் பறிபோய் உள்ளன.

பணம் இல்லாத கட்சிகளுக்கு திண்டாட்டம்

இத்தகைய ரோடு ஷோக்களை நடத்துவது தேர்தல் பரப்புரையின் போது அரசியல் கட்சிகளிடையே சமனற்ற நிலையையும் ஏற்படுத்துகிறது. பணம் உள்ள கட்சிகள் இத்தகைய ரோடு ஷோக்களை நடத்தித் தமக்கு செல்வாக்கு இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இது வாக்காளர்கள் மீது தாக்கத்தை உண்டாக்குகிறது. பணம் இல்லாத கட்சிகள் இதைச் செய்ய முடிவதில்லை.

அரசியல் சமத்துவத்தை சீர்குலைக்கிறது

'ஒருவருக்கு ஒரு வாக்கு' எல்லா வாக்குகளுக்கும் ஒரே மதிப்பு' என்ற அரசியல் சமத்துவத்தை உறுதி செய்த வயது வந்தோருக்கான வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டது நமது நாடாளுமன்ற ஜனநாயகமாகும். கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு செயற்கையாக மக்களைத் திரட்டுகிற அரசியல் நடவடிக்கைகள் இந்த அரசியல் சமத்துவத்தை சீர்குலைக்கின்றன.

முறைப்படுத்துவது அவசரத் தேவை

அரசியல் பரப்புரையில் ஏற்றத்தாழ்வை முறை "ரோடு ஷோக்கள்" என்கின்ற ஏற்படுத்துகிறது என்ற காரணத்தினால் தேர்தல் காலங்களில் அவற்றைத் தேர்தல் ஆணையம் தடை செய்திருக்கிறது. மற்ற நேரங்களிலும் இவற்றை முறைப்படுத்துவது அவசரத் தேவையாகி உள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களின் வழிமுறைகள் வகுப்பது தொடர்பாக விசிக சார்பில் கீழ்க்கண்ட யோசனைகளை முன்வைக்கிறோம்.

ஆர்ப்பாட்டம், பேரணி தொடர வேண்டும்

1. காலம் காலமாக உள்ள உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாடம், பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு போன்ற வடிவங்களே தொடர்ந்து பின்பற்றப்படவேண்டும்.

2. உழைக்கும் மக்களை வெறுமென வாக்குப் பண்டங்களாகக் கருதி, கூலி கொடுத்து திரட்டி, மணிகணக்கில் தெருவோரங்களில் காத்துக்கிடக்கச் செய்யும் 'ரோடு ஷோ" வடிவம் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.

வேட்பாளர்கள் நேரடியாக செல்லக் கூடாது

3. தேர்தல் பரப்புரையின் போதும் வாக்கு சேகரிக்கிறோம் என்கிற பெயரில் வீதிவீதியாக, ஒலிபெருக்கிகளின் பேரிரைச்சலுடன் பெரும்படையோடு செல்லும் போக்கையும் தடைசெய்ய வேண்டும்.

4. சமூக ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் பெருகியுள்ள நிலையில் அவற்றின் மூலமாகவே தேர்தல் பரப்புரை நடைபெறுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

5. வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களிடம் நேரடியாக வாக்குத்திரட்டும் நடவடிக்கைகளால், ஏராளமான பொருள் செலவுக்கும். முறைகேடுகளுக்கும் வழி வகுப்பது மட்டுமின்றி' சாதி. மத அடிப்படையில் பிரிவினை உணர்வு தலை துக்குவதற்கும் காரணமாகிறது.

எனவே, வேட்பாளர்கள் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலமாகவே வாக்கு சேகரிப்பதை ஊக்குவிக்க வேண்டும். நேரடியாக வாக்காளர்களிடம் செல்வதைத் தடுக்க வேண்டும்.

வெறுப்புப் பரப்புரைக்கு முற்றுப்புள்ளி

6. சமூக ஊடகங்களின் பெருக்கம் வெறுப்புப் பரப்புரை பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது. வெறுப்புப் பரப்புரையைத் தேர்தல் காலங்களில் மட்டுமின்றி அனைத்துக் காலங்களிலும் முற்றாகத் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்படவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.