கப்பலில் பணியாற்றிய கணவரை மீட்டு தாருங்கள் - மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு...!
பிலிபைன்ஸ் அருகே கடலில் கவிழ்ந்த கப்பலில் பணியாற்றிய கணவரை மீட்டு தர வேண்டும் என கூறி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் அருகே சரக்கு கப்பல் ஒன்று 26 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஹாங்காங் பகுதியை சேர்ந்த 33,205 டன் எடையுள்ள அந்த சரக்கு கப்பல் பசிபிக் பெருங்கடல் பகுதி வழியாக சென்றபோது புயலில் சிக்கி, பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் நீரில் மூழ்கியது.
இதில் பயணம் செய்த இந்தியர்களில் 11 பேர் மாயமானதாக அஞ்சப்படுகிறது. மேலும் 15 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பல் விபத்தில் மூழ்கியவர்களை ஜப்பான் கப்பல் படையினர் 2 ரோந்து கப்பல் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் மூலம் தேடி வருகின்றனர்.
மேலும் ஜப்பான் , பிலிப்பைன்ஸ், சீன நாட்டு தூதரகங்கள் மூலமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடலூர் அடுத்த திருபாதிரிப்புலியுரை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் சென்னையில் உள்ள விர்தி மேரிட்டைம் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் அந்த கப்பலில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் அக்கப்பலில் பணியிலிருந்த குருமூர்த்தியின் நிலைப்பற்றி முழுமையான தகவல்களை கிடைக்கவில்லை என்றும் அவர் மீட்கப்பட்டாரா என்ற விவரங்களை அவர் பணிபுரியும் நிறுவனம் கூற மறுக்கிறது என கூறியும், அவரது மனைவி லாவன்யா கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.