தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், இன்று முதல் ஜூன் 6 வரை வெப்பநிலை இயல்பை விட 2° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட படிப்படியாக உயரக்கூடும் என்ற அதிர்ச்சி தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் ஜூன் 5 முதல் 10 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று முதல் ஜூன் 06 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
வெப்ப அளவின் வேறுபாடு
இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் இன்று முதல் ஜூன் 06 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
