திருச்செந்தூர் முருகன் கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. ரூ.3.42 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளன. 

திருச்செந்தூர் முருகன் கோவில்

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஆகிவிடும். அந்த அளவுக்கு கூட்டம் அலைமோதும்.

உண்டியல் காணிக்கை

இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறிவிட்டால் உண்டியல் காணிக்கை செலுத்து வழக்கம். இந்த உண்டியல் காணிக்கை மாதந்தோறும் இரண்டு முறை எண்ணப்படுகிறது. அதன்படி மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை வசந்த மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கோவில் அறங்காவலர் குழுத் தலைவர்

கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர்கள், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக் குழுவினர்கள் ஈடுட்டனர்.

ரூ.3.42 கோடி காணிக்கை

இதில், 3 கோடியே 42 லட்சத்து 28 ஆயிரத்து 824 ரூபாயும், 1 கிலோ 701 கிராம் தங்கம், 22 கிலோ 791 கிராம் வெள்ளி, 7.04 கிலோ பித்தளை, 44.124 கிலோ செம்பு, 9.02 கிலோ தகரம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1237ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியலில் வெள்ளியிலான சுவாமி முகம் மற்றும் வேல்களும், வெளிமாநில லாட்டரி சீட்டுகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.