சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு கேட்டு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்; இன்னும் நிறைய இருக்கு...
பெரம்பலூர்
சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் பெரம்பலூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தமிழகம் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை மொத்தம் 247 பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
"ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.
ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும்.
முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.
சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 இலட்சமாக உயர்த்த வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50% பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும்.
கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும்
தனி நபர் இல்ல கழிவறைக்கு வழங்கும் மானியத்தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்" உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் இந்தப் போராட்டத்தால் அனைத்து பணிகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.