அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தாயாரும், அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளருமான மீனாள் அம்மாள் (74) உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.பி. உதயகுமாரின் தயாராரின் மறைவை அடுத்து தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாசமிகு தாயாரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரர் உதயகுமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்: அதிமுக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான R.B. உதயகுமார், MLA., அவர்களுடைய தாயாரும், அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளருமான திருமதி மீனாள் அம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரர் திரு. உதயகுமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், திருமதி மீனாள் அம்மாள் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
