பொள்ளாச்சி தனியார் பள்ளி மாணவன் 10ஆம் வகுப்பு மறுகூட்டலில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம். சமூக அறிவியல் பாடத்தில் மறுகூட்டலுக்குப் பின் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று சாதனை.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மே 16ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் தங்களது மதிப்பெண்களில் சந்தேகம் உள்ள மாணவர்களும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். அதன்படி 10ம் வகுப்பில் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் வெளியான நிலையில் மறு கூட்டல் அடிப்படையில் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த பொள்ளாச்சி தனியார் பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறு கூட்டல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆட்சி பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் பரத் வித்யா நிகேதன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் குருதீப் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்ணும், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களும் மொத்தம் 494 மதிப்பெண் பெற்றிருந்தார்.

500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம்

இந்நிலையில் சமூக அறிவியல் பாடத்தில் குறைவான மதிப்பெண் போடப்பட்டு இருப்பதாக கூறி மறு கூட்டலுக்கு மாணவன் விண்ணப்பித்தார். மறு கூட்டலில் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் போடப்பட்டது. இதனால் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாணவன் குருதீப்

மறு கூட்டல் அடிப்படையில் 500 க்கு 499 மதிப்பெண் பெற்ற அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் இன்று இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததால் மறு கூட்டல் அடிப்படையில் 499 மதிப்பெண் கிடைத்து தமிழகத்தில் முதலிடத்தை பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவன் குருதீப் தெரிவித்தார்.