ஜெயலலிதா பிறந்தநாளில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பிளவு நீடிக்கிறது. ஓபிஎஸ் குற்றச்சாட்டுகளை முன்வைக்க, இபிஎஸ் அமைதி காக்கிறார். அதிமுகவில் ஒற்றுமை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் தொடரும் மோதல்
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டியால் மூத்த தலைவர்கள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் கடந்த 8 வருடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியே அதிமுகவிற்கு கிடைத்தது. இதனால் அதிமுக தலைவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல ஓ.பன்னீர் செல்வமும் எந்த வித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயார் என அறிவித்துள்ளார். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமியோ எந்த வித பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வந்தார்.
ஒநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?
இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்டிருந்த பதிவில், பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஒநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது என இபிஎஸ் தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை
இந்த நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் மரியாதை செலுத்தினார், இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சோதனைகள் எல்லாம் வென்று அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றி உயர்ந்த உன்னதமான இடத்தில் மக்கள் அன்பை பெற்றார். அம்மாவின் மறைவுக்கு பின்னால் நடைபெற்ற அரசியல் சூது, சூழ்ச்சி, வஞ்சனை, நம்பிக்கை துரோகம் இவையெல்லாம் யாரால் அரசியலில் அரங்கேற்றப்பட்டது.
இபிஎஸ் பெயரை தவிர்க்க வேண்டும்
இதனை தொடர்ந்து பிறகு நடைபெற்ற சட்டமன்ற, நாடாளும்ன்ற, உள்ளாட்சி மன்றம் என 11 தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது என்பதற்கெல்லாம் ஒற்றை தலைமை வேண்டுமென முடிவெடுத்தவர் தான் பதில் சொல்ல வேண்டும். வசந்தகாலமாக இருந்த அதிமுகவை யார் மாற்றி உள்ளார்கள் என்பது உங்கள் எல்லாருக்கும் நன்றாக தெரியும். அவர்களின் பெயரை எல்லாம் வருங்காலத்தில் தவிர்க்க வேண்டிய கட்டாயம் சூழல் உள்ளதாகவும் கூறினார். அவரவர் இதயங்கள் மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். எங்கள் வாய் நல்ல வாய் என ஆவேசமாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
