அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரை சீமான் கொச்சைப்படுத்தி பேசியதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இருபெரும் தலைவர்களை இழித்துப் பேசியதற்காக சீமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Seeman on Anna and MGR : பேரறிஞர் அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் கொச்சைப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழின் உயர்வைத் தன் சொல்லாற்றலால் உயர்த்திக் காட்டியதோடு, தன்னுடைய நாவன்மையினால், 

பேச்சாற்றலால், முற்போக்குத் திட்டங்களை மக்கள் முன்வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். "உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் - அண்ணாவை விமர்சித்த சீமான்

அதாவது, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்து தொடர்ந்து மூன்று முறை, பத்து ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வலம் வந்து, பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். 

சீமான் வருத்தம் தெரிவிக்கனும்- ஓபிஎஸ்

இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களின் புகைப்படங்களைத் தாங்கிக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் சனிக்கிழமைதோறும் பிரச்சாரம் செய்வதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கொச்சைப்படுத்தி பேசுவது, நாகூசும் வார்த்தைகளால் வசைபாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

சீமான் அவர்கள் குறிப்பிட்ட அந்த வார்த்தைகளை இங்கு குறிப்பிடுவதே நாகரிமற்ற செயல் என்று நான் கருதுகிறேன். இருபெரும் தலைவர்களை இழித்துப் பேசியதற்கு திரு. சீமான் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துவதாக ஓபிஎஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.