உதயசூரியனுக்கு ஓட்டே கிடையாது... 5000 ரூவா தர்ரேன்னுட்டு... வறுத்தெடுக்கும் பாட்டி!!
பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுகொண்ட மூதாட்டி ஒருவர் தனக்கு ரொக்கம் வழங்காததால் தான் ஓட்டுபோட்ட கட்சியை கடுமையாக வறுத்தெடுத்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுகொண்ட மூதாட்டி ஒருவர் தனக்கு ரொக்கம் வழங்காததால் தான் ஓட்டுபோட்ட கட்சியை கடுமையாக வறுத்தெடுத்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த பரிசுத் தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் மஞ்சள் துணிப்பை வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 2,15,48,060 குடும்பங்களுக்கு இப்பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான செலவு ரூ1,088 கோடியாகும். ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு பைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கொரோனா பரவல் காலம் என்பதால் ரேஷன் கடைகளில் கூட்டம் ஏற்படாத வகையில் டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளன. டோக்கன்கள் அடிப்படையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கன்கள் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக பல்வேறு மாவட்டங்களில் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் இந்த தரமற்ற பொருட்களுக்கு பதிலாக பணம் கொடுத்திருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொண்ட மூதாட்டி ஒருவர், பணம் கொடுக்கிறோம் ஓட்டு போடுங்கள் என்று சொன்னதால் ஓட்டு போட்டோம், ஆனால் பணம் கொடுக்கவில்லை. ஓட்டு கேட்டு வரட்டு, அவங்களுக்கு இனி ஓட்டே கிடையாது என்று ஆவேசமாக வறுத்தெடுத்துள்ளார். அவரது பேச்சில் இருக்கும் கோபம் அவரது அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. ஒரு தரப்பு மக்கள் பொங்கள் பரிசு தொகுப்பை ஏற்றுக்கொண்டாலும் மற்றொரு தரப்பு மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொண்டதில் பெரிய அளவில் உடன்பாடும் சந்தோஷமும் இல்லாமல் தான் பெற்றுக்கொள்கின்றனர். கடந்த ஆண்டு பொங்கல் பரிசோடு ரொக்கமும் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரொக்கம் வழங்கப்படாதது பலரையும் ஏமாற்றமடைய செய்துள்ளது.