பாமக முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் NIA அதிரடி சோதனை. மதம் மாற்ற எதிர்ப்பால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ராமலிங்கம் கொலை வழக்கில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் NIA சோதனை நடத்தி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் நகரச் செயலாளர். பாத்திர கடை தொழில் செய்து வருகிறார். 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் . இந்த கொலைக்கான முக்கிய காரணம் மதம் மாற்றம் செய்வதை ராமலிங்கம் கண்டித்ததாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தான் அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராமலிங்கம் கொலை வழக்கு

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவிடைமருதூர் போலீசார் குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், அசாருதீன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ) மாற்றம் செய்யப்பட்டது.

5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

 இந்த கொலை வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டு 10 நபர்கள் கைதான நிலையில் 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். இந்த விசாரணையானது நடைபெற்று கொண்டு வரும் சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் பதுங்கி இருந்த முகமது அலி என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

10 இடங்களில் தேசிய புலனாய்வு முகாம் சோதனை

இந்நிலையில் இன்று திண்டுக்கல் பேகம்பூர் பகுதி ஜின்னா நகரில் வசித்து வரும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளரான ஷேக் அப்துல்லா என்பவருது இல்லத்தில் காலை 6:00 மணி முதல் 3 தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஒட்டன்சத்திரம் யூசிப் என்பவரது இல்லத்திலும் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரது இல்லத்திலும் கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகாம் அதிகாரிகள் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.