இன்றுடன் விடை பெறும் அக்னி நட்சத்திரம் !! இனி வானிலை எப்படி இருக்கும் !!
கடந்த மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெறுகிறது. ஆனாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதம் அனல் காற்று வீசும் என்றும், வெப்பம் 4 முதல் 6 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆண்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் உச்சபட்ச வெப்பம் என்பது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலின் போது தான். இந்த அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.
பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டில் முதல் முறையாக 17 இடங்களில் நேற்று வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுதவிர வேலூர், திருச்சி, மதுரை, கரூரில் உள்ள பரமத்தி ஆகிய இடங்களில் வெப்பநிலை சதமடித்தது.
அதேபோல் பாளையங்கோட்டை, நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது.
அதே நேரத்தில் அதிக வெயில் அடிக்கும் என கூறப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும் உள் தமிழகத்தில் நான்கு முதல் ஆறு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் அனல் காற்று வீசும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.