பாஜக வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் தமிழகத்தைச் சேர்ந்தவரையே களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய துணைக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வரும் 9ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக செயல்பட்டு வருகிறார். அதேவேளை, பாஜக கூட்டணி தமிழகத்தை சேர்ந்தவரை துணைக் குடியரசுத் வேட்பாளராக களமிறக்கியுள்ள நிலையில், எதிக்கட்சிகள் கூட்டணியாக இணைந்து தமிழகத்தை சேர்ந்தவரையே துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான அண்ணன் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இண்டி கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும். இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-இல் நமது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான அண்ணன் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.