பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது, ராகுல் காந்தியின் குற்றம் சாட்டு. இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Voter list manipulation stalin question : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை, மகாராஷ்டிரா, கர்நாடக தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு மற்றும் வாக்கு திருட்டு நடந்ததாக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டினர். குறிப்பாக பெங்களூர் மத்திய தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் போலி வாக்குகள் என்றும், பல இடங்களில் ஒரே முகவரியில் பல வாக்காளர்களின் பெயர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டார். 

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இது பாஜகவுக்கு சாதகமாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தது. இந்த குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்தம் வெளிப்படையாகவும், கடுமையான நெறிமுறைகளை பின்பற்றியும் நடந்ததாகவும், எந்த முறைகேடும் இல்லை என்றும் விளக்கமளித்தது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார் . அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. இதனை தொடர்ந்து பின்வரும் கேள்விகள் எழுகின்றன:

முதலமைச்சர் ஸ்டாலினின் 7 கேள்விகள்

1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?

2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?

3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?

4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?

5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?

6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?

7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?