Asianet News TamilAsianet News Tamil

அலர்ட் !! தமிழகத்தில் வேகமாக பரவும் பிஏ4, பிஏ5 வகை கொரோனா வைரஸ்.. அமைச்சர் எச்சரிக்கை..

தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
 

Minister Ma.Subramanian warns - BA.4, BA.5 variant coronavirus spreading fast in Tamil Nadu -
Author
Tamil Nadu, First Published Jun 23, 2022, 3:27 PM IST

சென்னை அடையாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு  வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்று ஆய்வு செய்தார். கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களின் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. 

மேலும் பேசிய அவர், உலகம் முழுவதும் தினசரி கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 8 மாநிலங்களில் 6 ஆயிரம் வரை கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனிடையே தமிழகத்திலும் பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் 50% சென்னையில் பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க:பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் வந்த பிரசார வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதா? உண்மை நிலவரம் என்ன?

எனவே சென்னை, சேலம், நாமக்கல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகும் மாவட்டங்களில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார். சென்னையில் மட்டும் 2,225 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சென்னை மாநகராட்சியின் களப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் கூறினார். சென்னையில் 112 தெருக்களில் 3 பேருக்கு அதிகமாகவும் 25 தெருக்களில் 5 பேருக்கு அதிகமாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களில் 92% பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனதே வரலாறு.. அதிமுகவை மறைமுகமாக சாடும் முதல்வர் ஸ்டாலின்.!

கொரோனா தொற்றினால் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் வீடுகளில் இடவசதி இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் 8 சதவீதம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பிஏ4,பிஏ5 கொரோனா வைரஸ் தான் அதிகளவில் பரவி வருகிறது. இவை வேகமாக பரவும் தன்மை உடையது என்பது நிருபணமாகி இருக்கிறது என்ற அமைச்சர் தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று எச்சரித்தார். 

மேலும் தங்களது குழந்தைகளை சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது என்பது முக்கியம் என்று அறிவுறுத்தினார். தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் 10-ம் தேதி 1 லட்சம் இடங்களில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்ட ஓபிஎஸ்..! இபிஎஸ்க்கு எதிராக தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Follow Us:
Download App:
  • android
  • ios