Madurai Tungsten Mineral Auction Cancelled: மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஏலத்தை ரத்து தற்பகாலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந் நிலையில், இப்போது ஏலத்தை ரத்து செய்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து போராடி வந்த மக்கள் பிரதிநிதிகளை மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி சந்தித்துப் பேசியதை அடுத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

டெல்லியில் புதன்கிழமை (ஜனவரி 22) நடந்த சந்திப்பில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி ஏலத்தை ரத்து செய்யுமாறு அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். தூதுக்குழுவின் பேச்சை பொறுமையாக கேட்ட மத்திய அமைச்சர், பல்லுயிர் மரபு பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

டங்ஸ்டன் விவகாரம்: தமிழக மக்களுக்கு இன்று கிடைக்க போகும் குட்நியூஸ்! அண்ணாமலை சொன்ன தகவல்!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் உணர்ந்து, அப்பகுதி மக்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறது.

முன்னதாக, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் முதலமைச்சராக இருக்கும்வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு இன்று (வியாழக்கிழமை) நல்ல செய்தி வரும் வெளியாகும் எனக் கூறினார். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியைச் சந்தித்துப் பேசியபோது, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யப்படும் என உறுதி அளித்தார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று மத்திய சுரங்க அமைச்சகம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை மதுரை மக்கள் மகிழ்ச்சியுடன் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த ஊடகங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்!" என்றும் கூறியுள்ளார். "இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது!" என்றும் தெரிவித்துள்ளார்.

எலி ஜோசியத்துக்கு மாறிய ஜோசியர்கள்! திண்டுக்கல்லில் எலி ஜோசியம் பார்க்க கூடும் மக்கள் கூட்டம்!