- Home
- Tamil Nadu News
- ஒரு வேட்பாளர் எத்தனை லட்சம் செலவு செய்யலாம்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட லிஸ்ட் இதோ!
ஒரு வேட்பாளர் எத்தனை லட்சம் செலவு செய்யலாம்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட லிஸ்ட் இதோ!
திமுக, அதிமுக போன்ற பணபலமிக்க கட்சிகளின் வேட்பாளர்களும் சரி, நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளின் வேட்பாளர்களும் சரி ஒரே மாதிரி தான் தேர்தல் செலவு செய்ய முடியும்.

களைகட்டிய தேர்தல் திருவிழா
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பணத்தை வாரி இறைக்க முடியாது. திமுக, அதிமுக போன்ற பணபலமிக்க கட்சிகளின் வேட்பாளர்களும் சரி, நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளின் வேட்பாளர்களும் சரி ஒரே மாதிரி தான் செலவு செய்ய முடியும்.
ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்யலாம்?
அதாவது ஒரு வேட்பாளர் சட்டசபை தேர்தலின்போது அதிகபட்சம் ரூபாய் 40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காக செலவினம் மேற்கொள்ள இயலும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சியினை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பறக்கும் படைகள் அமைப்பு
வேட்பாளரின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக, தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட அமைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள், 2160 நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
எவ்வளவு பணம் பறிமுதல்?
இக்கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்றுவரை (17/03/2026) ரூபாய் 23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன. பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மறைந்த தலைவர்களின் சிலையை மறைக்க வேண்டியதில்லை
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் அனைத்து தரப்பினராலும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்தை விதிகளின்படி காலம் சென்ற / மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படவேண்டியதில்லை என்றும், தற்போது அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு பொது இடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ வைக்கப்பட்டு இருந்தால் அவைகள் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தவுடன், மறைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் எடுத்து செல்லும் பணம்
பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் ரொக்கம் எடுத்து செல்லும்பொழுது அவை எப்படி பெறப்பட்டது, எதற்காக எடுத்து செலலப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் அல்லது அதற்கான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்தால், இத்தொகை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்து செல்லப்படும் தொகை இல்லை என்று தணிக்கை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். பின்பு அத்தொகை உரியவரிடம் திரும்ப வழங்கப்படும், பறிமுதல் செய்யப்படமாட்டாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

