கரூர் கூட்ட நெரிச உயிரிழப்புகளுக்கு திமுக அரசு தான் முழு காரணம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழ்ந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தால் தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கரூர் கூட்ட நெரிசல்

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய் தான் காரணம் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதே வேளையில் திமுக அரசு சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. குறுகிய இடம் கொடுத்து விட்டது என்பது பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில், கரூர் உயிரிழப்புகளுக்கு திமுக அரசு தான் முழு காரணம் என்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை இரங்கல்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''கரூரில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல்துறை கவனக்குறைவு

ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. விஜய் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

போதிய ஏற்பாடுகள் இல்லை

திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.

முழு விசாரணை வேண்டும்

உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.