Asianet News TamilAsianet News Tamil

எங்கள் ஊரில் உள்ள குளம், ஏரிகளை தூர்வாராவிட்டால் சாலை மறியல் செய்வோம் - ஆட்சியருக்கு எச்சரிக்கை மனு...

If the pond in our village and the lakes do not leave we will block the road -
If the pond in our village and the lakes do not leave we will block the road -
Author
First Published Nov 28, 2017, 8:06 AM IST


தஞ்சாவூர்

எங்கள் ஊரில் உள்ள குளம் மற்றும் ஏரிகளை தூர்வாராவிட்டால் அடுத்த மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் விவசாயிகள் எச்சரித்து இருந்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில் பல்வேறு தரப்பினர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அதன்படி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலச் செயலாளர் சந்திரகுமார் தலைமையில் கீழவன்னிப்பட்டு மற்றும் மேலவன்னிப்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், "கீழவன்னிப்பட்டு கிராமத்தின் ஆற்றுப்பாசன வாய்க்காலான குளமங்கலம் - அருமுளை வாய்க்காலில் தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலவன்னிப்பட்டு வாய்க்காலிலும் பல ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை.

இந்த கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் 250 அடிக்கு கீழ் குறைந்துவிட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே, கல்யாணஓடை ஆற்றின் உட்பிரிவுகளான குலமங்கலம் - அருமுளை வாய்க்கால் மற்றும் மேலவன்னிப்பட்டு வாய்க்காலை தூர்வாரி ஆற்று தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்தப் பகுதிகளில் உள்ள குன்னமையனார் கோவில் குளம், வெள்ளத்தான் குளம், கொண்டாமரி குளம், வெள்ளாழம், ஆதிதிராவிடர் குளம், செம்புகனேரி, புதுஏரி, புதுக்குளம், உடையநாச்சி, ஆளம்பள்ளம், கீழவன்னிப்பட்டு பெரிய ஏரி ஆகியவற்றிலும் தண்ணீர் இல்லை. இவைகளையும் தூர்வாரி தண்ணீர் நிரப்ப முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ஆம் தேதி ஒரத்தநாடு - மன்னார்குடி சாலையில் வன்னிப்பட்டு என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்" என்று அதில் கூறியிருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios