நாளை நடைபெற இருந்த மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

நாளை நடைபெற இருந்த மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நாளை (ஜன.10) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதனிடையே சென்னையைச் சேர்ந்த இரண்டு மின் வாரிய ஊழியர்கள் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: திருப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் போராட்டம்

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது, சட்டப்படி வேலை நிறுத்த போராட்டத்திற்கு 6 வாரங்கள் முன்கூட்டியே அறிவிக்கை வெளியிடப்படவில்லை என்பதால் மின்சார வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

இதையும் படிங்க: உப்புச் சப்பில்லாத ஆளுநர் உரை இது.! திமுகவா? ஆளுநரா? ஓபிஎஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு.!!

தமிழக அரசு தரப்பிலும் மின்சார வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஆவின்பால் விநியோகம், மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், மின்சார வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதனால் நாளை அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் நடைபெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.