தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழக பொது விநியாகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, விரல் ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் மூலம் கார்டுதாரர்களின் விவரம் சரிபார்க்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த குழு அனைத்து மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் செயல்படுவார் என்றும், உறுப்பினர்களாக வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர், குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி ஆகியோர் செயல்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கட்கிழமைகளில் இக்குழு கூடி நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும், சரியான நேரத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அறிக்கை விபரங்களை உணவு வழங்கல் துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !
