அதிமுக.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் என பல முக்கிய பொறுப்புகளை அலங்கரித்த செங்கோட்டையன் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். அடுத்த 10 தினங்களில் பொதுச்செயலாளர் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் நான் அந்த பணிகளை மேற்கொள்வேன் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக செங்கோட்டையனின் அனைத்து வகையான கட்சிப் பதவிகளும் பறிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் புயலைக் கிழப்பி உள்ளது.

இந்நிலையில் இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் டெல்லிக்கு சென்று பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்கப்போவதாக சொல்கின்றனர். ஆனால் நான் ஹரித்துவார் செல்கிறேன். மனக்கஷ்டம் காரணமாக ஹரித்துவாரில் உள்ள ராமரை தரிசிக்க செல்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரிந்து சென்ற தலைவர்களை பொதுச்செயலாளர் ஒருங்கிணைக்கவில்லை என்றால் அந்த பணிகளை நான் செய்வேன் என்று சொல்லியிருந்த செங்கோட்டையன் தற்போது அந்தப் பணிகளை விடுத்து ஹரித்துவாருக்கு சென்றுள்ள சம்பவம் அதிமுக தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையன் கோவிலுக்கு செல்வதாக சொன்னாலும் அவர் மறைமுகமாக பாஜக தலைவர்களை சந்தித்து பஞ்சாயத்து பேசவே டெல்லி செல்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.