தமிழ் தெரியாததால் அரசு பணியில் சேர்ந்த ஜெயக்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றம் அரசு ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் : தமிழகத்தில் சென்னை முதல் ராமேஸ்வரம் வரை வட மாநில தொழிலாளர்கள் நாள் தோறும் அதிகரித்து வருகிறார்கள். சலூன் கடை, சமையல் கடை, கட்டிட பணி என அனைத்திலும் வட மாநில இளைஞர்கள் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசு பணியிலும் வட மாநிலத்தவர்கள் இணையும் நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான நிலையில் தமிழ் மொழி தெரியாமல் தமிழக அரசு பணியில் இணைந்தவரை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் இந்தியாவின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் ! அமித் ஷா பேச்சு !

தமிழ் தெரியாததால் பணி நீக்கம்

தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரின் தந்தை கப்பல் படையில் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக வெளிமாநிலத்தில் தங்கி படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்திருக்கிறார். இந்த நிலையில் ஜெயக்குமார் கடந்த 2018ஆம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராக தமிழக அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். இதனிடையே அரசு பணியில் சேர வேண்டும் என்றால் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பது அரசின் விதிமுறையாகும். அந்த வகையில் ஜெயக்குமாருக்கு தமிழ் மொழி தெரியவில்லை, மேலும் தமிழ் தேர்ச்சி பெறாததால், அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தனி நீதிபதி உத்தரவிற்கு தடை

இந்த உத்தரவிற்கு எதிராக ஜெயக்குமார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரர் ஜெயக்குமார் தமிழர் என்பதால் அரசு பணி வழங்கலாம் என்று உத்தரவிட்டு தீர்ப்பு அளித்திருந்தார். இந்த உத்தரவிற்கு எதிராக மின்சார வாரியத்துறை சார்பாக இரண்டு நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

தமிழ் கட்டாயம் தெரிந்திருக்கனும்

அப்போது நீதிபதிகள் தரப்பில், தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர்ந்தால் தமிழ் மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என கூறினர். தமிழ்நாட்டின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளதால், ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும் என தெரிவித்தனர். மேலும் அரசு ஊழியருக்கு தமிழ் தெரியாது என்றால், அவரால் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும், மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை என்றால், பொதுப் பணிக்கு ஏன் வருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். 

தமிழ் மொழி வளர்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழ் தேர்வை எழுத உத்தரவு

சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் படித்தால் தமிழக அரசு வேலை கேட்காதீர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் மொழியில் தேர்வு எழுதி வெற்றிபெறாத சூழலில் எப்படி பணி நீட்டிப்பு செய்ய முடியும்? எனவும் வினா எழுப்பினர். இதனையடுத்து தனி நீதிபதியின் உத்தவரை நிறுத்தி வைத்த நீதிபதிகள் அமர்வு, மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மொழித் தேர்தல் வெற்றிபெற வேண்டும் என மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கின் ஒத்தி வைத்தனர்.