Viral Video: பணத்தை பிரசாதமாக தரும் கருப்பசாமி! தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோவிலா?
Viral Video: தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலில், பக்தர்களிடம் இருந்து எவ்வித காணிக்கையும் பெறாமல், அவர்களுக்குத் திரும்பப் பணத்தை பிரசாதமாக வழங்கப்படும் வினோத மற்றும் நெகிழ்ச்சியான பாரம்பரியம் சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

வினாயகபுரம் கருப்பசாமி கோவில் திருவிழா
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வினாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வரம்தரும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில். இக்கோவிலில் அண்மையில் நடைபெற்ற இரவு நேர திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இந்த விழாவின் போது, கருப்பசாமி வேடமணிந்து அருள்வந்து ஆடிய பூசாரி, கூர்மையான வாளின் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது, அங்கு திரண்டிருந்த மக்களுக்குத் தன் கைகளாலேயே நாணயங்களை அள்ளிப் பிரசாதமாக வழங்கினார்.
‘பிடிகாசு’ பிரசாதம்
இங்கு வழங்கப்படும் இந்த புனித நாணயங்கள் "பிடிகாசு" என்று அழைக்கப்படுகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து எந்தவொரு கட்டணமோ அல்லது காணிக்கையோ பெறப்படுவதில்லை. மாறாக, அவர்களின் வாழ்வில் வளம் பெருகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கவும் இந்த பிடிகாசு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
“கோவிலுக்கு வரும் மக்கள் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், இந்த பிடிகாசை வாங்காமல் செல்வதில்லை. கருப்பசாமி தன் கைகளால் வழங்கும் இந்த ஒரு பிடிகாசு, தங்கள் வாழ்வில் பல நன்மைகளையும், செல்வச் செழிப்பையும் தரும் என்று பக்தர்கள் ஆழமாக நம்புகின்றனர்.”
இணையவாசிகளின் பாராட்டு
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தட்டுகளிலும், துணிகளிலும் இந்த நாணயங்களைப் பிரசாதமாகப் பெற்றுச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. பணத்தாசை பிடித்துள்ள இன்றைய உலகில், பக்தர்களிடம் பணம் வாங்காமல் அவர்களுக்கே பணத்தைப் பிரசாதமாகக் கொடுக்கும் இந்த உன்னத வழக்கம், சமூக வலைத்தளங்களில் பலரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்துள்ளதுடன், பெரும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

