தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் (11-11-2022) தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் சராசரியாக 47.03 மி.மீ. மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 250 மி.மீ. சராசரி மழை பதிவாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வடகிழக்குப் பருவமழை:

சீர்காழியில் 436 மி.மீ., கொள்ளிடம் பகுதியில் 317 மி.மீ., செம்பனார் கோயிலில் 242 மி.மீ. அதி கனமழையும், கடலூர் மாவட்டத்தில் புவனகிரியில் 206 மி.மீ., சிதம்பரம் பகுதியில் 308 மி.மீ. என அதி கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், திருப்பூர், புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 18 மழைமானி நிலையங்களில் மிக கனமழையும், பல்வேறு மாவட்டங்களில் 108 மழைமானி நிலையங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க..எடப்பாடி Vs ஓபிஎஸ்! இருவரையும் சந்திக்காத பிரதமர் மோடி - வெளியான அதிர்ச்சி காரணம் !

முதல்வர் ஸ்டாலின்:

இதன்காரணமாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், நிவாரண மையங்கள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 16,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து மழை பெய்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது.

முதல்வர் ஆய்வு:

இதனை விரைவில் வடியவைக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீலகிரி, இராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 92 வீரர்களை கொண்ட 4 குழுக்கள் அனுப்பி வைக்கவும், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 163 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் நிலைநிறுத்திடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க.பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?

முதல்வர் அறிவுறுத்தல்:

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும், கனமழையின் காரணமாக ஏற்படும் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

 மழை நிவாரணப் பணிகளில் இரவுபகல் பாராது பணியாற்றி வரும் அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டதோடு, தொடர்ந்து இதே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க..கனமழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம் இதோ