பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் பொருளாளர் திலகபாமாவுக்கு மேடையில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. 

பாமக சித்திரை முழு நிலவு மாநாடு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த உள்ளனர். இதனால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாமக பொருளாளர் திலகபாமா

மாநாட்டு மேடையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரிசையில் பாமக பொருளாளர் திலகபாமாவிற்கும் இடம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக பொருளாளர் மாவை மேடையில் இடமில்லை எனக் கூறியதோடு கீழே மற்ற பாமக நிர்வாகிகளோடு அமர வைத்திருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமதாஸ் Vs அன்புமணி மோதல்

கடந்த மாதம் பாமக உட்கட்சி மோதல் பூதாகரமானது. கட்சியில் யாருக்கு அதிகாரம் உள்ளது? யார் தலைவர் என்பது தொடர்பாக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது. பாமகவின் தலைவர் பொறுப்பையும் தானே ஏற்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். கட்சியின் நிர்வாகிகள் யாரையும் கலந்தாலோசிக்காமல் ராமதாஸ் எடுத்த இந்த முடிவு கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. ராமதாஸ் அறிவித்ததுமே, அன்புதானே எல்லாமே என்று பதிவிட்ட அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா, பாமகவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் மருத்துவர் ராமதாஸ் தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவு கட்சியினர் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அன்புமணி ஆதரவாக திலகபாமா

இதையடுத்து ராமதாஸை சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார் திலகபாமா. ஆனால் அவரை சந்திக்க மறுத்துவிட்டார் ராமதாஸ். இதையடுத்து 3 மணி நேரம் காத்திருந்த திலகபாமா ராமதாஸை சந்திக்காமலேயே திரும்பினார். இதையடுத்து பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பாமக பொருளாளர் திலகபாமாவை நோய்க்கிருமி என்றும் நன்றி இல்லாதவர் என்றும் கடுமையாக விமர்சிப்பதோடு கட்சியை விட்டு விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்த விவகாரம் பாமகவில் பூதாகரமான நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலையிட்டு வடிவேல் ராவணனுக்கும் திலகபாமாவிற்கும் சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து பாமக பொருளாளர் திலகபாமா வழக்கம் போல் தனது கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். 

ஆதரவாளர்கள் அதிர்ச்சி

பாமக வன்னியர் மாநாடு தொடக்கத்திலிருந்து ஆக்கபூர்வமாக பணியாற்றி வந்தவர் நேற்று கூட விழா ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு செய்திருந்தார். அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிட்டதாக பாமக தொண்டர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்த நிலையில், தற்போது திலகபாமாவிற்கு மாநாட்டு மேடையில் இடமில்லை, கீழே போய் அமருங்கள் என அவமதித்திருப்பது அவரது ஆதரவாளர்களை கொதிப்படைய செய்துள்ளது.