மாணவர்களை மாஸ்க் அணியச் சொல்லுங்கள்... கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!!
பள்ளிகள் திறக்கப்பட்டு 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டு 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 253 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 253 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்கள், மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்கள் மாநகராட்சி சுகாதார நிலையங்களை அணுகி ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியவர்கள் விழுக்காடு 99.72 ஆகவும், இரண்டாம் தவணை செலுத்தியவர்கள் 85.51 விழுக்காடாகவும் உள்ளனர். இந்த நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தவிர, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற இணை நோய் உடையவர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட 11 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே இன்று இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 476 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 552 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,313 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,18,658 ஆக உள்ளது.