குப்பை கொட்டும் போது பாக்கெட்டில் ரூ.500 வச்சுக்குங்க… சென்னை மாநகராட்சி அதிரடி
பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
சென்னை: பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் பொது இடங்களில் எப்போதும் குப்பைகளும், கழிவுகளும் நிரம்பி இருப்பதை காணலாம். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, நோய் தொற்றும் பரவி வருகிறது.
இதனை தடுக்கும் விதமாக ஒரு அதிரடி நடவடிக்கைக்கு சென்னை மாநகராட்சி தயாராகி விட்டது. இனி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இது குறித்து சென்னை மாநகராட்சி கூறி இருப்பதாவது: பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை வீசுவோ மீது மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்.
தரம் பிரிக்கப்படாத குப்பையை கொட்டும் தனிநபர் இல்லத்தினருக்கு 100 ரூபாய், அடுக்குமாடி குடியுருப்புகளுக்கு 1000 ரூபாய், பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் (1 டன்வரை) 2000 ரூபாய், 2 டன்னுக்கு அதிகமாக கொட்டினால் 5000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது