திமுகவிற்கு நன்கொடை பெற மருத்துவ மாணவர்களின் தகுதிப்பட்டியலை விற்ற மாஜி அமைச்சர்.. வீடியோ வெளியிட்ட அண்ணாமலை
நீட் தேர்வுக்கு முன்னதாக தனியார் மருத்துவ கல்லூரிக்கும் திமுக அரசுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அரசு மருத்துவ கல்லூரிகளில் மெரிட்டில் இடம் பிடிக்கும் மாணவர்களின் பட்டியலை விற்று பல கோடி ரூபாய் திமுகவிற்கு நிதி பெற்றதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
![Annamalai accused the former minister of selling the merit list of medical students to a private medical college to get donations for DMK KAK Annamalai accused the former minister of selling the merit list of medical students to a private medical college to get donations for DMK KAK](https://static-ai.asianetnews.com/images/01hwz9y0pzdhsx7c24j56bjstz/asianet-news--13-_363x203xt.jpg)
நீட் எதிர்ப்பு - திமுக போராட்டம்
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சனையை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளது. இதனிடையே நேற்று திமுக மாணவர் அணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. இதனிடையே திமுகவின் நீட் போராட்டம் தொடர்பாகவும், நீட் தேர்வுக்கு முன்னதாக தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் திமுக அரசுக்கும் இருந்த தொடர்புகளை வெளிப்படுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.
தனியார் மருத்துவ கல்லூரி- திமுக தொடர்பு
முன்னதாக அந்த சமூகவலைதள பதிவில் அண்ணாமலை கூறியதாவது, நீட் தேர்வுக்கு முந்தைய காலத்தில் கட்சி நன்கொடைக்கு ஈடாக மருத்துவ தகுதிப் பட்டியலை எப்படி விற்றுவிட்டார்கள் என்பதை திமுக மூத்த தலைவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி வெளிப்படையாக கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அந்த விடியோ பதிவானது, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திமுக மூத்த நிர்வாகி ஆற்காடு வீராசாமி அளித்துள்ள பேட்டியில், நான் பொருளாளராக இருப்பதால் திமுகவிற்கு நிதி தேவை என கருணாநிதி என்னிடம் சொல்லுவார். எனவே நான் எம்ஏஎம் வீட்டிற்கு செல்வேன். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர், நான் அமைச்சராக இருந்த போது என் வீட்டிற்கு பல முறை வந்துள்ளார். அவர் மருத்துவ கல்லூரி நடத்துகிறார். நான் மருத்துவ துறையில் அமைச்சராகவும் இருந்துள்ளேன்.
ED CASE : அனிதா ராதாகிருஷ்ணனை தூக்க திட்டம் போட்ட ED.. மனுவை டிஸ்மிஸ் செய்து ஷாக் கொடுத்த நீதிமன்றம்
திமுகவிற்கு நன்கொடை பெற்ற மாஜி அமைச்சர்
மருத்துவ துறையில் முதலில் ஒரு பட்டியல் வெளியிடுவோம். அதனை எம்ஏஎம் கேட்பார். ஏன் என அவரிடம் கேட்பேன், அதற்கு எம்ஏஎம், அரசு வெளியிடும் பட்டியலில் இருப்பவர்களை எங்கள் கல்லூரியில் சேர்ந்து கொள்வோம். பின்னர் அவர்களுக்கு அரசு ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்து விடும். இந்த இடம் வேண்டாம் என கூறிவிடுவார்கள், எனவே இதனை பயன்படுத்தி மேனேஜ்மெண்ட் கோட்டாவில் விற்றுவிடுவோம் என தெரிவித்ததாக ஆற்காடு வீராசாமி தெரிவிக்கிறார்..நானும் அவர் கேட்கும் பட்டியலை கொடுப்பேன். திமுகவிற்கு நிதியாக ஒரு கோடி , இரண்டு கோடி கொடுப்பது அவருக்கு சாதாரணம், கொஞ்சம் அழுத்தி கேட்டால் 5 கோடி வரை கொடுப்பார் என ஆற்காடு வீராசாமி தெரிவிப்பதாக அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது.
மேனேஜ்மென்ட் கோட்டாவில் மருத்துவ இடம் விற்பனை
இதனை தொடர்ந்து நீட் தேர்வுக்கு முன்னதாக திமுக அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் இடையே உள்ள உடன்பாட்டை விவரித்து தான் பேசிய வீடியோ ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சியில் தேர்வு முடிவு வெளியிடப்படுவதற்கு முன்பு தனியார் மருத்து கல்லூரிக்கு அந்த பட்டியலை கொடுப்பார்கள். யாருக்கெல்லாம் அரசு மருத்தவக்கல்லூரி அழைத்து மருத்துவ இடம் கிடைக்கும் என தெரிந்து கொண்டு அவர்களை அழைத்து மருத்துவ இடம் கொடுத்து விடுவார்கள்.
அதன் பிறகு 15 நாட்களுக்கு பிறகு கவுன்சிலிங் நடக்கும் போது தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தவர்களுக்கு அரசு கல்லூரியில் மெரிட்டில் சீட் கிடைத்து விடும். எனவே ரிசர்வ் பன்ன இடம் வேண்டாம் என்று தெரிவித்து விடுவார்கள். இதனால் அந்த இடத்திற்கு மேனேஜ்மென்ட் கோட்டாவில் விற்றுக்கொள்ளுவார்கள் என அண்ணாமலை அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.