ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் பெயர் மாற்றப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
Amit Shah CISF training center : மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு பல பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 தேதி அதிகாரப்பூர்வமாக ராஜாத்திய சோழன் என அரக்கோணம் (சிஐஎஸ்எப்) மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்தின் பெயர் மாற்றப்பட்டது.
![]()
அமித்ஷாவிற்கு அணிவகுப்பு மரியாதை
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார். 56வது எழுச்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு மலரை வெளியிட்டார். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 6 இடங்களில் மருத்துவமனை மற்றும் சிறப்பு வளாகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து கொல்கத்தா, நொய்டா, சிவகங்கை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ரூ.87.69 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்ட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அவருக்கு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
பாதுகாப்பு பணிக்கு ஒரு லட்சம் பேர் தேர்வு
நாட்டின் பாதுகாப்பு பணிகளில் சிஐ எஸ் எப் வீரர்களின் பங்கு மிக முக்கியமானது. இவர்கள் அமைதியான முறையில் பாதுகாப்பு பணியை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது இடத்தில் நாட்டின் பாதுகாப்பு படை இருக்கும் அளவிற்கு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். வரும் ஆண்டில் இன்னும் பல்வேறு இடங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 14 ஆயிரம் சி ஐ எஸ் எப் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது போக மற்ற பாதுகாப்பு பணியின் துறைகளுக்காக ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழில் சிஐஎஸ்எப் தேர்வு
மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே தேர்வு எழுதி வந்திருந்தனர். இத்தேர்வுக்கு வரும் காலங்களில் தமிழ் மற்றும் பெங்கால் மொழியில் இத்தேர்வுகள் எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தரா். அதுபோல தமிழக அரசும் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை தமிழில் கற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமித்ஷா கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
