Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், காதல் விவகாரம் காரணமாக மணிகண்டன் என்ற இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததை அடுத்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்துக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முயற்சித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் வைத்து பேசி அறிவுரை வழங்கி பெற்றோருடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மணிகண்டன் தற்போது ஆலந்தலை சுனாமி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூருக்கு வந்துள்ளார். அப்போது தோப்பூர் அருகே சாலையில் வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி வெட்டியுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து ஓடி அருகில் உள்ள மரக்கடைக்குள் நுழைந்துள்ளார்.
ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று மரக்கடைக்குள் வைத்து சரமாரியாக வெட்டினர். கழுத்தில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்ட மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தில் இளைஞர் பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
