மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலையத்தில் குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்த இன்டர்சிட்டி ரயிலில் இருந்து இறங்க முயன்ற கல்லூரி மாணவர் தவறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கியதில், உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பன்னீர்குண்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன், பிச்சையம்மாள் தம்பதி. இவர்களது இளைய மகன் சண்முகபிரியன். நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர்

பொதுவாக திருமங்கலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்காது. எதிர் திசையில் வரும் ரயிலுக்கு வழி விடுவதற்காகவும், சிக்னல் கோளாறு காரணமாகவும் தான் அங்கு விரைவு ரயில்கள் நிற்கும். இதனால், இந்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் பெரும்பாலும் மதுரை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமாக மீண்டும் திருமங்கலம் வருவது வழக்கம்.

ஆனால், தற்போது திருமங்கலம் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பகல் நேரத்தில் இவ்வழியாக செல்லும் விரைவு ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தி சில பயணிகள் ஆபத்தை உணராமல் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்படுகின்றனர்.

தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய ஆளுநரின் தேநீர் விருந்து; முதல்வர் பங்கேற்பு

அந்த வகையில் சண்முக பாண்டியனும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் குறைந்த வேகத்தில் சென்ற இன்டர்சிட்டி விரைவு ரயிலில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது கால் தவறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் அவர் சிக்கிக் கொண்டார். இதனால், சண்முகபாண்டியன் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர், சண்முக பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.