Asianet News TamilAsianet News Tamil

தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய ஆளுநரின் தேநீர் விருந்து; முதல்வர் பங்கேற்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.

tn cm mk stalin participate governor's tea party at raj bhavan
Author
First Published Jan 26, 2023, 6:05 PM IST

நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து குடியரசு தினத்தில் ஆளுநர், தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், முக்கிய அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கமான நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

ஆனால், அண்மை காலமாக தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது. உச்சக்கட்டமாக திமுக எம்.பி.கள் தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அளுநர் அவசர அவசரமாக டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லி பயணத்திற்கு பிறகான ஆளுநரின் செயல்பாடுகள் சற்று மாறத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு என்பதனை தமிழகம் என்று அழைக்கச் சொன்னதற்கான விளக்கத்தை வெளியிட்டிருந்தார். மேலும் பல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில், தமிழகத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

125 அடி ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட கொடி; தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானை

இந்நிலையில், பொதுவான நடைமுறையான தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தன. ஆனால், ஆளுநரின் அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios