கோவைக்கு வந்த மேற்கு ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளா பாரம்பரிய செண்டை மேளத்தை உற்சாகமாக வாசித்து மகிழ்ந்தனர். 

மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்தின் சபாநாயகர் மைக்கில் ராபர்ட்ஸ், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் டேவிட் ஹனி, டேவிட் மற்றும் இந்திய வம்சாவளி ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர். இவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர். இதைத்தொடர்ந்து கோத்தகிரியில் தேயிலை விவசாயம் சார்ந்த நிகழ்வு மற்றும் பழங்குடியின கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு, கேரள செண்டை மேளம் இசை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சியை கண்டு களித்த ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களும் செண்டை மேளம் இசைத்து மகிழ்ந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் கூறுகையில், கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், இங்குள்ள கல்வித்தரம் அறியவும் தமிழகம் வந்துள்ளோம். கோவை மற்றும் கோத்தகிரியில் தனியார் கல்லூரிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நம் நாட்டில் உள்ளன.
நம் நாட்டின் கல்வித்தரம் உயர வேண்டும் கல்வித்தரத்தில் வேறுபாடும் மாறுபாடும் இருக்க கூடாது என்றார்.

தமிழகத்திற்கும் வெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை‌ மேம்படுத்த வேண்டும். நல்ல வேலை செய்பவர்களுக்கு எப்போதும் எங்கேயும் வேலை உண்டு. கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் தமிழகத்தில் மகிழ்வை அளிக்கிறது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர், உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்திருக்கிறோம் என அவர் கூறினார் .

தமிழகம் வந்த மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக கலாச்சார வரவேற்பை அளிக்காமல் கேரள மாநிலத்தின் கலாச்சார வரவேற்பை அளித்தது பொதுமக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.