கோவையில் கல்லூரி மாணவி அஸ்விதா வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பிரவீன்குமார் என்ற இளைஞர் சரணடைந்து, திருமணத்திற்கு மாணவி ஒப்புக்கொள்ளாததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா(19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால் அஸ்விதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த மர்ம நபர் கல்லூரி மாணவியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பித்து விட்டார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அஸ்விதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து கல்லூரி மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிாந்தவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் கல்லூரி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தப்பிய மர்ம நபர் யார் என்பது விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாணவியை கொலை செய்த வழக்கில் பிரவீன்குமார் என்ற இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நிதி நிறுவன ஊழியரான பிரவீன்குமார் அஸ்விதாவும் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாததால் அஸ்விதாவை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி மாணவி வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.