அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக மாணவி

அண்ணா பல்கலைக்கழக மாணவி டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். மாணவியை குற்றவாளி ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்த போது தொலைப்பேசியில் சார் ஒருவருடன் பேசியதாக மாணவி புகாரில் தெரிவித்திருந்தார்.

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

இதனையடுத்து யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது. திமுக அரசுக்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 5 மாதங்களில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று மே 28ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஞானசேகரன் குற்றவாளி என்றும் 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி, மேலும் மாணவியை ஏமாற்ற போடப்பட்ட நாடகம் தான் சார் என ஒருவர் இருப்பதாக, எனவே இந்த வழக்கில் மேலும் சந்தேகங்களை எழுப்புபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதப்படும் என அரசு தரப்பு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

காப்பாற்ற எத்தனையோ சித்து வேலை

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

SIRஐ காப்பாற்றியது யார்?

அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக. பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? #SIRஐ_காப்பாற்றியது_யார்?

அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது

இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.