கோவை அருகே மனைவி மட்டன் குழம்பு வைத்து தராத விரக்தியில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே இருக்கிறது தொட்டிபாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நாகராஜ். வயது (47). அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அதிகமான குடிப்பழக்கத்திற்கு நாகராஜ் அடிமையானவர் என்று அந்தப் பகுதியில் இருப்பவர்கள் கூறுகின்றனர். தினமும் வேலை முடித்து இரவு குடித்துவிட்டு வரும் நாகராஜ் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சம்பவத்தன்று நாகராஜ் குடித்துவிட்டு போதையுடன் வீட்டுக்கு வந்திருக்கிறார். வழக்கம்போல மனைவியுடன் சண்டையிட்ட நாகராஜ் தனக்கு மட்டன் குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மட்டன் வாங்கி குழம்பு வைக்கும் அளவிற்கு தற்போது வீட்டில் பணம் இல்லை என்று அவரது மனைவி தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வீட்டிற்கு வெளியே சென்று நாகராஜ் படுத்து இருக்கிறார். அப்போது மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்திருக்கிறார்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை கோவில்பாளையத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு நாகராஜ் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து மருத்துவர்கள் நாகராஜிற்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகராஜின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பிச்சையெடுத்த மூதாட்டியின் பையில் கட்டுக்கட்டாக பணம், நகை, பேங்க் பாஸ்புக்..! அதிர்ச்சியடைந்த அதிகாரி..!