பிச்சையெடுத்த மூதாட்டியின் பையில் கட்டுக்கட்டாக பணம், நகை, பேங்க் பாஸ்புக்..! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!
புதுச்சேரியில் கோவில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்திய போது மூதாட்டி ஒருவரின் பையில் நகை, பணம், பேங்க் பாஸ்புக் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
புதுச்சேரியில் இருக்கும் காந்திவீதியில் அமைந்திருக்கிறது ஈஸ்வரன் கோவில். இந்த கோவிலின் அருகே ஏராளமான பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து வந்துள்ளனர். பிச்சைக்காரர்கள் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாக கருதிய நகராட்சி நிர்வாகம் அவர்களை அப்புறப்படுத்த முடிவெடுத்திருக்கிறது. அதன்படி நகராட்சி ஊழியர்கள் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது பிச்சை எடுத்து வந்த மூதாட்டி ஒருவரின் பை தவறி கீழே விழுந்தது. அதில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சிதறி சாலையில் விழுந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சிதறிய பணத்தை எடுத்தனர். அதில் 15 ஆயிரம் இருந்துள்ளது. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியிடம் விசாரணை செய்து அவரது பையை சோதனை செய்தனர். அதில் மூதாட்டியின் நகை, ரேஷன் கார்டு, முதியோர் பென்ஷன் கார்டு, பேங்க் பாஸ்புக் ஆகியவையும் இருந்தது. பேங்கில் 1 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருப்பதாக பாஸ்புக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் இருந்த தகவலின்படி மூதாட்டி புதுச்சேரியில் இருக்கும் வாழைக்குளம் என்கிற பகுதியைச் சேர்ந்த ரமணன் என்பவரது மனைவி பர்வதம் என்பது தெரிய வந்தது. ரமணன் இறந்தபிறகு, மூதாட்டி பிச்சை எடுத்து வந்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு கருதி மூதாட்டியை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உயிருக்கு போராடிய நல்லபாம்பிற்கு உதவிய பொதுமக்கள்..! கால்நடை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை..!