கோவை கடையில் விற்கப்படும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாகக் கூறி வன்மத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்ட நபர்கள் காவல்துறையிடம் சிக்கியுள்ளனர்.

கோவையில் பிரியாணி கடையில் இந்துக்களுக்கு கருத்தடை மாத்திரை கலந்த பிரியாணியும் முஸ்லீம்களுக்கு கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணியும் விற்பனை செய்யப்படுவதாக ட்விட்டரில் பொய்யான தகவலைப் பரப்பியவ்ரகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமீப காலமாக கோவையில் சமூக வலைதளங்களில் மோதலை உருவாக்கும் செயல்களில் பதிவிடுபவர் மீது மாநகர காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் அருகே நடந்த கொலைச் சம்பவம் மற்றும் ரவுடிகளுக்கு இடையே அரிவாள் வெட்டு, துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச் சம்பவங்கள் நகரையே உலுக்கிய நிலையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ரவுடிகளை கைது செய்தனர்.

ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சமூக வலைதளங்கள் மூலம்தான் அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து தூண்டப்படுகின்றன என்று தெரிந்தது. இதனால், சர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கணக்குகளை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் பிரியாணி கடை ஒன்றில் இந்துக்களுக்கு மட்டும் கருத்தடை மாத்திரை கலந்த பிரியாணி விற்பனை செய்யப்படுவதாகவும், முஸ்லிம்கள் வந்தால் கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணி கொடுக்கப்படுதாகவும் சிலர் பதிவு செய்திருப்பதாக தாமரைக் கண்ணன் என்பவர் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2008 ஆகியவற்றின் கீழ் உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடர்கின்றனர்.