“GPay மூலம் பாஜக பணப்பட்டுவாடா” அண்ணாமலை மீது திமுக பரபரப்பு குற்றச்சாட்டு
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவை தொகுதியில் பாஜக சார்பில் ஆன்லைன் மூலமாக பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
![bjp candidate annamalai illegally sent a money through gpay for voters at coimbatore complaint raised by dmk vel bjp candidate annamalai illegally sent a money through gpay for voters at coimbatore complaint raised by dmk vel](https://static-ai.asianetnews.com/images/01hvrjcdhbf2cndyzsnwh3txwx/mixcollage-18-apr-2024-05-49-pm-4460_363x203xt.jpg)
மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், மாவட்டத்தைச் சாராத வெளியூர் நபர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் காவல் துறையினர், தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக சார்பில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பத்ரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நான் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளராக உள்ளேன். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போடடியிடும் அண்ணாமலை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக அவரது தேர்தல் பணிமனையில் இருந்து வாக்காளர்களுக்கு அலைபேசியின் மூலம் அழைத்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு GPay மூலம் பணம் அனுப்பி வருகிறார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க கவெண்டும். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை நாடாளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகமான அவினாசி சாலையில் அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரியும், GPay மூலம் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்தும் வருகிறார்.
சென்னையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், கரூரைச் சேர்ந்த அவரது மைத்துனர் சிவக்குமார். பணிமையில் பணிபுரியும் கிரண் குமார், ஆனந்த், பிரசாந்த் சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிமாவட்டத்தினரை தொகுதியை விட்டு வெளியேற்றியும், வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் விநியோகிப்பவர்கள் மீதும் இவர்களை வழிநடத்தும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.