கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி உட்பட மூன்று பேர் யோகாவில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகள் செய்து அசத்தியுள்ளனர். 

பள்ளி மாணவ, மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் யோகா கலையில் வயது வித்தியாசமின்றி பலரும் சாதனையாளர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த, ரூபிகாவின் மகள் பவ்ய ஸ்ரீ, மகன் பூவேஷ். குடும்ப சூழ்நிலை காரணமாக கணவரிடம் விவாகரத்து பெற்ற ரூபிகா மனம் தளராமல் தனது மகள், மகனை யோகாவில் பெரிய சாதனையான கின்னஸ் வரை சாதிக்க வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

9ம் வகுப்பு படித்து வரும் பவ்ய ஸ்ரீ தனது குழந்தை பருவம் முதலே யோகாவை கற்று, யோகா கலையில் எட்டு கோண வடிவில் தொடர்ந்து 2 நிமிடம் 6 வினாடிகள் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரை தொடர்ந்து இவரது சகோதர்களான ஒன்பது வயதான பூவேஷ் மற்றும் சர்வஜித் நாராயணன் ஆகியோர் தனது அக்காவை போலவே யோகாவில் தொடர்ந்து பல சாதனைகளை செய்து அசத்தியுள்ளனர். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் விருதுகளை வாங்கி, வீடு முழுவதும் கோப்பைகள், விருதுகள், சான்றிதழ்கள் என குவித்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர். பல்வேறு சாதனைகளுக்காக மூன்று பேருக்கும் அண்மையில் மதுரை முத்தமிழ் சங்கத்தின் இளம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.