#TokyoOlympics ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய சீன வீராங்கனை..! மீராபாய் சானுவுக்கு தங்கம்?
டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது நிரூபணமானால், வெள்ளி வென்ற இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்கும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி, ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே வெள்ளி பதக்கம் வென்று கொடுத்தார் மீராபாய் சானு.
“ஸ்னாட்ச்” பிரிவில் 87 கிலோ, ”கிளீன் அன்ட் ஜெர்க்” பிரிவில் 115 கிலோ என, மொத்தம் 202 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் மீராபாய் சானு, 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதே எடைப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹி மொத்தமாக 210 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேஷிய வீராங்கனை கேண்டிக் விண்டிங் வெண்கல பதக்கம் வென்றார்.
அதன்பின்னர் இந்தியாவிற்கு எந்த பதக்கமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மீராபாய் சானுவின் வெள்ளிப்பதக்கம் தங்கமாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
49 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 210 கிலோ தூக்கி தங்கம் வென்ற சீன வீராங்கனை ஹூ ஜிஹி-க்கு ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானால், வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்கும்.